ஜானி படத்தில் வரும் "காற்றில் எந்தன்
கீதம்" என்ற பாடல் ஜானகி
குரலிலும், "இது ஒரு பொன் மாலை பொழுது..." என்ற பாடல் எஸ்பிபி குரலிலும்,
மேகம் கருக்குது மழை வரபார்க்குது வீசி அடிக்குது காற்று.." என்ற பாடலும், முள்ளும்
மலரும் படத்தில் உள்ள அனைத்து பாடல்கள் நீங்கள் கேட்டவை என்ற படத்தில் வரும்
"பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.." என்ற பாடல், "ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது..." என்ற பாடல், ஸ்ரீபிரியா நடித்த "உறவுகள் தொடர்கதை
உணர்வுகள்..." என்ற பாடல், இன்னும் இதுபோல் என்றும் காலத்தால் மறக்க முடியாத பாடல்களை
நாம் சொல்லிகொண்டே போகலாம் எல்லாம் ராஜாவின் அழகிய இசையில் உதிர்த்த அருமையான இசை மலர்
மொட்டுகள். அம்மொட்டுகளை மலரவிடும்போது வரும் இசை, நம்மை அப்படியே அந்த இளமை கால பருவத்திற்கு
அழைத்து செல்கின்றன.
என்னே இசை..! .எங்கையா போனான் அந்த இளையராஜா...!
என்னை கேட்டால் ராஜாவின் இசையின் சிறப்பு அந்த
1970 இருந்து 80 வருடம் வரைதான். அந்த வருடங்களில் வந்த பாடல்கள்தான் இளையராஜாவை இன்றும்
ராஜாவாக வைத்திருக்கிறது.
அன்னகிளி படத்தில் வரும் பாடல் எல்லாம் அவருக்கு
வைரங்கள். அடடா..! அப்பாடல்கள் என்னம்மா திகட்டாத தேன் நம் காதுகளுக்கு... அன்னகிளி
பாடல்கள் எப்போ தொலைகாட்சியில் வந்தாலும் நான் தவறவே விடமாட்டேன். அப்பாடலில் எனக்கு
பிடித்த இன்னொரு சிறப்பும் உள்ளது. அதில் நடித்த சுஜாதா, அவங்க பார்க்க அப்படியே எங்கம்மா
மாதிரியே இருப்பாங்க, அதே உருவம். என் உறவுகள் என்னிடம் சொல்லுவாங்க, "சுஜாதா
போலாதாண்டா உங்க அம்மா இருப்பாங்க.." என்று. அவங்க அப்படி சொல்லும் போதேல்லாம்
எனக்கு இன்னும் அந்த படத்தின் பாடலின் மேல் தனியாத ஒரு ஈர்ப்பு வரும். எனக்கு நான்கு
வயதிருக்கும், சுஜாதா போன்ற அழகோடு, ஒரு நாள் சுமங்களியாக போய் சேர்ந்துவிட்டாள் என்
அம்மா... சுஜாதா என்ற நடிகைதான் எனக்கு என் அம்மாவை அடிக்கடி நினைவுபடுத்துவாங்க...
அதற்கு ராஜாவுக்கும் நான் நன்றி சொல்லியாகனும். அன்னகிளீ படம் ராஜாவுக்கு முதல் படம், பஞ்சு அருணாசலம் இயக்கத்தில் வெளிவந்து
வெள்ளிவிழா கண்ட படம்.
நானும் என் மனைவியும் என் மகனை கொஞ்சும் போதேல்லாம்
எனக்கு ராஜா இசை அமைத்த "சட்டம் என் கையில்" என்ற படத்தில் வரும் "ஆழகடலின் தேடி அனுப்பு ஆசை சுகத்தில்
தோன்றிய மொட்டு...." என்ற பாடல்தான் எனக்கு நினைவுக்கு வரும். அதை பாடிக்கொண்டே
மகனை கொஞ்சுவேன். அது ஒரு தனி சுகம்தான். "எங்கம்மா கூட இப்படியேல்லாம் என்னை
கொஞ்ச்சிருப்பாங்கல்ல... என்று என் அம்மாவையும் நினைத்துகொள்வேன்.
இசை ஒருவரை நெகிழ்வடைய வைக்கிறது அவர்களின் கரடுமுரடு
தன்மையை சீராக்குகிறது. அதில் ஏதோ ஒரு மெல்லிய உணர்வை உட்புகுத்துகிறது. கண்களில் வழிந்தோடும்
கண்ணீருடன் அது உறவாடுகிறது. ஏதோ ஒரு அழுத்தம் நெஞ்சில் கனக்கிறது. நம்மில் உயிர்ந்தோடும்
உள்சுவாசதுடன் அது இணைகிறது. இசையின் உணர்வுகள் மட்டும் நம்மில் இல்லையேன்றால் இங்கு
அன்பே செத்துபோகும். பின் அன்பின் உறவாடும் உறவுகள் நம்மில் ஏது இங்கே.!!! அன்பின்
உணர்வுகளை இசை மீட்டெடுக்கிறது, மெறுகுட்டுகிறது. இன்னும் அதற்கு அழகு சேர்கிறது.
எப்போது ராஜா வெகுஜன மக்களின் இசையை விட்டு சாஸ்திரிய
சங்கீதத்திற்கு போனாரோ அன்றே அவரின் இசையும் அவருடன் சென்றுவிட்டது. யாருக்கு வேணும்
இளையராஜாவின் சாஸ்திரிய சங்கீதம் மற்றும் மேல்நாட்டு சிம்பொனி இசை...!?
எம்மக்கள் இன்னும் நாட்டுபுற இசையுடன் இலக்கிய இசையுடந்தான்
வாழ்கிறார்கள். அதில்தான் அவர்களின் நெஞ்சின் ஆழத்தை தொடமுடியும்.
நான் அந்த 70,80 காலத்து ராஜாவை மனதார நேசிக்கிறேன்.
அவரின் இசை என்னை நேசிக்கவைக்கிறது.
இசை நட்புடன்: